Saturn Transit - sani peyarchi December 2011



த‌மி‌ழ்.வெ‌ப்து‌‌னியா.கா‌ம்: சனிப் பெயர்ச்சி நடைபெற உள்ளது. இது எந்தெந்த ராசிகளுக்கு பலமாகவும், எந்தெந்த ராசிகளுக்கு பலவீனமாகவும் இருக்கும்? 

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: தற்பொழுது நடைபெறவுள்ள சனிப் பெயர்ச்சி மிகவும் பிரமாண்டமான சனிப் பெயர்ச்சி. ஏனென்றால், சனி தனக்குப் பிடித்தமான துலாம் ராசியில் வந்து உட்கார்ந்து உச்சமடைகிறார். அதாவது தன்னுடைய வீட்டில் ஆட்சி அடைகிறார். ஆனால் சுக்ரன் வீட்டில் உச்சமடைகிறார். இது சுக்ரனுடைய வீடு. உச்சம் என்பது, முழு சக்தியுடன் இங்கு வந்து உட்காருகிறார் என்பது. அவ்வாறு முழு சக்தியுடன் வந்து உட்காருவதால் - சனி பகவான் ஆக்கும் சக்தி, அழிக்கும் சக்தி, காக்கும் சக்தி என மூன்று சக்தியும் உடையவர். சிவனின் வெளிப்பாடு என்றும் சொல்வார்கள். அதேபோல், சனி என்பது நீதிக்கோள். அதனால், நீதிமன்றங்கள், நீதிபதிகள் கை ஓங்கும். தீர்ப்புகளால் நாடெங்கும் மாற்றங்கள் ஏற்படுவது போன்றெல்லாம் நடக்கும். 

பொதுவாக பார்த்தால், ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் அருமையான இடத்திற்கு வருகிறது. ரிஷபத்திற்கு 6வது வீட்டிற்கு வருவது பெரிய சிறப்பு. இதுவரை சிக்கிக் கிடந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு 3வது வீட்டிற்கு வருகிறது. அது பெரிய பலத்தைக் கொடுக்கும். அடுத்ததாக, தடுமாறிக்கொண்டிருந்த தனுசு ராசிக்காரர்களுக்கு 11வது வீட்டிற்கு வருகிறது. பொதுவாக 3, 6, 11 தான் சனிக்கு அதியோகங்கள் தரக்கூடிய இடங்கள் என்று சொல்லப்படுகிறது. அதானல் இவர்களுக்கெல்லாம் சிறப்பாக அமையும்.

தவிர, மிதுன ராசிக்காரர்களுக்கு ஓரளவிற்கு நிம்மதி கிடைக்கும். ஏனென்றால் இதுவரை அர்த்தாஷ்டமச் சனியெல்லாம் இருந்ததால், இதற்குமேல் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும். கடக ராசிக்காரர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு இதற்குமேல் உடல்நிலை சீராகும். ஜென்மச் சனி என்று சொல்வார்கள். இதுவரை அவர்கள் ராசிக்குள்ளேயே சனி உட்கார்ந்திருந்தார். அது தற்போது விலகுகிறது. அதனால் மைண்ட், உடல்நிலை எல்லாம் சாதாரண நிலைக்கு வரும். மனக்குழப்பம் எல்லாம் நீங்கும். அதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. 

துலாம் ராசிக்காரர்கள் இதற்குமேல் உடல்நிலையை கவனித்துக்கொள்ள வேண்டும். அசிடிட்டி பிரச்சனை போன்றெல்லாம் வரும். காலம் கடந்து சாப்பிடுவதையெல்லாம் தவிர்க்க வேண்டும். மதுப்பழக்கம், புகைப்பழக்கம் உள்ளவர்களாக இருந்தால், இதற்குமேல் அதையெல்லாம் தவிர்த்துவிட வேண்டும். இல்லையென்றால் அடிக்கடி மருத்துவமனை செல்ல வேண்டியிருக்கும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதற்குமேல் ஏழரைச் சனி ஆரம்பிக்கிறது. அதனால் ஆரம்பமாகும் 6 மாதம் கொஞ்சம் கடினமாக இருக்கும். அடுத்த வருடம் மே மாதத்தில் இருந்து ஓரளவு நிம்மதி கிடைக்கும். 

மகர ராசிக்கார்களுக்கெல்லாம் மிகவும் அருமையாக காலகட்டம். கும்ப ராசிக்காரர்களுக்கு பெரிய நிம்மதி கிடைக்கும். ஏனென்றால் அஷ்டமத்துச் சனி அவர்களைப் போட்டு ஆட்டிப்படைத்து வந்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் வாழ்வின் எல்லைக் கோட்டிற்கே அவர்கள் சென்றுவிட்டார்கள். மீன ராசிக்காரர்களுக்கு அஷ்டமச் சனி தொடங்குகிறது. அதனால் 2012 ஜூன் மாதத்தில் இருந்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விபத்துகள், இழப்புகள், கணவன்-மனைவி பிரிவு என பல பாதிப்புகள் மீன ராசிக்காரர்களுக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 

பொதுவாக இந்தச் சனி மாற்றம் தனி நபர்களுக்கும் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. உலகெங்கும், நாடெங்கும் ஜனநாயகப் புரட்சிகள் வெடிக்கும். பொதுவாக ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிரான முழக்கங்கள் அதிகரிக்கும். ஏனென்றால், சனி பகவான் ஜனநாயகம், சுதந்திர மனப்பான்மை, பாட்டாளி, ஏழை மக்கள், நடுத்தர மக்கள் இவர்களுக்கெல்லாம் உரிய கிரகம். அடுத்ததாக, வியாபாரிகள் கொஞ்சம் பாதிப்படைவார்கள். அதுபோன்ற சிக்கல்களெல்லாம் வரும்.